விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ப்பது தொடர்பான இரண்டாம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரியில் சேர இயலாத மாணவர்கள் மற்றும் முந்தைய கல்வி ஆண்டுகளில் பயின்று கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இரண்டாம் கட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.