விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம், விதவை, திருமண, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு அமருமிடத்திற்கும் சென்று மனுக்களைப் பெற்ற ஆட்சியர், அவை மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், 12 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், இடை நிற்றல் மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை எடுத்ததன் ஒரு பகுதியாக அவனது குடும்பத்திற்கு ரூ. 3000 காசோலையையும் ஆட்சியர் வழங்கினார்.